கோவை மாநகரில் அரசு பொருட்காட்சி வளாகத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் கருப்பு நிற சிறிய வண்டு இருந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி அதிகாரிகளிடம் சென்றுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு இடங்களில் பணியின் தன்மைக்கு ஏற்ப காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சி வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, ஒரு தூய்மை பணியாளர் பெற்ற உணவை சாப்பிடும் முன் பரிசோதித்தபோது, அதில் கருப்பு நிற சிறிய வண்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள், அந்த காட்சியை காணொளியாக பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், அரசு பொருட்காட்சி வளாகத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காலை உணவு வழங்கப்படவில்லை என்றும், தனியார் அமைப்பு அல்லது ஒப்பந்ததாரர் மூலம் உணவு வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உணவு எங்கிருந்து வழங்கப்பட்டது, அதில் ஏற்பட்ட குறைபாடு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும், கடந்த மே மாதத்தில் கோவை மாநகராட்சியின் 91-வது வார்டுக்குட்பட்ட போத்தனூர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் புழு இருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது நடைபெற்ற விசாரணையில் உணவு வழங்கிய ஒப்பந்ததாரரின் அலட்சியம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Seithi Punal
