Dailyhunt
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை 'கருணாநிதி தேசம்' என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள் - வானதி சீனிவாசன்!

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை 'கருணாநிதி தேசம்' என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள் - வானதி சீனிவாசன்!

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்.

திருச்சியில் நேற்று (1.4.2026) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஒருவாரம் தங்கியிருந்து, தமிழ்நாடு எப்படி தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், உத்தரபிரதேசம், மணிப்பூர் போன்று வன்முறைக் காடாக ஆகிவிடும். இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே, 'தட்சிண பிரதேஷ்" என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்" என கூறியிருக்கிறார்.

திருச்சியில் கட்சிக்காக காலங்காலமாக உழைத்த திமுக நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில், மத அடிப்படைவாத அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் நிறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். அவரை ஆதரித்து பேசும் போது, மணிப்பூர் கலவரம் பற்றி பேசியிருக்கிறார். ஆனால், ஸ்டாலினின் தந்தை கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது தான், கோவையில் மதக் கலவரம் வெடித்தது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல் முறையாக, கோவையில் தொடர் குண்டு வெடிப்பு கொடூரம் நிகழ்ந்தது. இதனால் கோவை மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தின் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. பெங்களூரு போல கோவை பெருநகரமாக மாற முடியாமல் போனதற்கும் இந்த குண்டுவெடிப்பே காரணம்.

திமுக ஆட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் கார் வெடிகுண்டு வெடித்தது. மத பயங்கரவாதிகளை திமுக அரசு கண்டுகொள்ளாத நிலையில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தமிழ்நாட்டில் பயங்கரவாதிகளை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து அவர்களின் காதில் பூ சுற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை சிறுபான்மையினர் ஓட்டுக்காக பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றியது திமுக அரசுதான். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1998 திமுக ஆட்சியில் கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு. அதை கோவை மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஒரு வாரம் தங்கி, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளாகவே மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் வராத மாவட்டங்களே இல்லை என்கிற அளவுக்கு தமிழ்நாட்டில் பயணம் செய்திருக்கிறார். கோவை, கன்னியாகுமரி, திருச்சி, சென்னை என தமிழகத்தின் பல பகுதிகளில் பல நாட்கள் தங்கியிருக்கிறார். மக்களோடு மக்களாக பழகியிருக்கிறார். தமிழ்நாட்டு தெருக்களில்பல கிலோ மீட்டர் நடந்திருக்கிறார். தமிழர்களின் வீடுகளில் உணவருந்தி இருக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டின் கலாசாரமும், தமிழின் தொன்மையும், தமிழர்களின் உழைப்பால் ஏற்பட்ட முன்னேற்றமும், திமுகவின் இந்து மத வெறுப்பும், சிறுபான்மையினர் வாக்குகளுக்காக மத பயங்கரவாதத்தை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் வரலாறும் நன்றாகவே தெரியும்.

தமிழர்களே இல்லாத, தமிழ்நாட்டிற்கு தொடர்பே இல்லாத மேடைகளிலும், உலக அரங்கைகளிலும், "உலகின் மூத்த மொழி தமிழ்" என்று முழங்கி வரும், திருக்குறளை, மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை, புறநானூற்று வரிகளை உலகம் அதிர பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் பெயரை தட்சிணப் பிரதேஷ் என்று மாற்றி விடுவார் என்று ஸ்டாலின் கூறுவது எவ்வளவு அபத்தமானது என்பது ஸ்டாலினின் மனசாட்சிக்கே தெரியும்.

இப்போது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் கருணாநிதி சிலைகளை திறந்து வருகிறார்கள். அரசின் சார்பில் எந்த கட்டிடம் கட்டப்பட்டாலும், எந்த திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் அதற்கு கருணாநிதி பெயரை தான் வைக்கிறார்கள். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை 'கருணாநிதி தேசம்' என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள். எனவே, மக்களை ஏமாற்றி வெற்றி பெற ஸ்டாலின் போடும் நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். இந்த மூன்று வாரங்களில் திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal