மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
இதில் மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு தொகுதியைத் தவிர்த்து, 293 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய ஆரம்பகட்ட நிலவரங்களின்படி, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில் பாஜக 159 இடங்களில் முன்னிலை பெற்று, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 119 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதர கட்சிகளான காங்கிரஸ் 4 இடங்களிலும், இடதுசாரிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
இந்தத் தேர்தலின் முக்கியத் திருப்பமாக, பபானிபூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜியைப் பின்னுக்குத் தள்ளி, பாஜகவின் முக்கிய முகமான சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார். மேலும், நந்திகிராம் தொகுதியிலும் சுவேந்து அதிகாரியே முன்னிலை பெற்றுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க 148 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 159 இடங்களைக் கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளதால், அங்கு 14 ஆண்டுகளாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக, சமீபத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 89 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

