மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கட்டம் கட்டமாக வெளிப்பட்டு வரும் நிலையில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பவானிபூர் தொகுதியில் ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை நிலவரம் திருப்பம் மாறிக் கொண்டே உள்ளது.
அந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுவேந்து அதிகாரியை பின்னுக்குத் தள்ளி, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி மூன்றாம் சுற்று முடிவில் மீண்டும் முன்னிலைப் பிடித்துள்ளார்.

அந்த சுற்று கணக்கெடுப்பின் படி, சுவேந்து அதிகாரி 8,461 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், மம்தா பானர்ஜி 9,359 வாக்குகள் குவித்து 898 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் திகழ்கிறார்.
இருப்பினும், மாநிலம் முழுவதும் பார்க்கும்போது பாரதிய ஜனதா கட்சி வலுவான எழுச்சியுடன் 181 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. மறுபுறம் திரிணமூல் காங்கிரஸ் 104 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தம் 293 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில், ஆட்சியை அமைக்க குறைந்தபட்சம் 148 இடங்கள் அவசியம். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி 181 இடங்களில் முன்னிலை வகிப்பதால், தெளிவான பெரும்பான்மையை எட்டியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மேற்கு வங்க அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கும் வாய்ப்பு உருவாகி, முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Seithi Punal
