294 தொகுதிகளை கொண்டுள்ள மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் கடந்த 23-ஆம் தேதி மற்றும் 29 -ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், மிகப்பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும், அதீத கண்காணிப்பு வளையத்திற்குள்ளும் நடந்து இந்த தேர்தல் நடந்துள்ள நிலையில், வரும் 04 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 08 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தபோது, 1,100 கம்பெனி மத்தியப் படைகள் (சுமார் 1.1 லட்சம் வீரர்கள்) பயன்படுத்தப்பட்டனர். ஆனால், இந்த 2026 தேர்தலில் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது.
இதில், மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) என நாட்டின் அனைத்து முக்கியப் புலனாய்வு அமைப்புகளும் மேற்கு வங்கத்தில் நிலைகொண்டுள்ளன. அம்மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்த பின்னரும், வன்முறையைத் தவிர்க்கும் பொருட்டு இந்தப் படைகள் உடனடியாகத் திரும்பப் பெறப்படாது என அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு படைக்குவிப்பை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது, ''மத்தியப் படைகளைக் கொண்டு வாக்காளர்களை அச்சுறுத்தி, பாஜகவிற்குச் சாதகமான சூழலை உருவாக்க மத்திய அரசு சூழ்ச்சி செய்கிறது" என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அங்கு நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், மேற்கு வங்க மாநிலத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடப் போவதில்லை என இந்தியாவின் முன்னணி தேர்தல் கணிப்பு நிறுவனமான 'Axis My India' அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது;
"மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் 80-க்கும் மேற்பட்ட கள ஆய்வாளர்களைக் கொண்டு விரிவான கணக்கெடுப்புகளை நடத்தினோம். ஆனால், ஆய்வில் பங்கேற்ற வாக்காளர்களில் சுமார் 70 சதவீதத்தினர் தங்களின் அரசியல் விருப்பத்தை எவ்விதத்திலும் வெளிப்படுத்த முன்வரவில்லை. வாக்காளர்களின் இந்த அமைதி காரணமாக, துல்லியமான புள்ளிவிவரங்களை எட்ட முடியவில்லை. தவறான முடிவுகளை வழங்குவதைத் தவிர்க்கவே, இந்த முறை கருத்துக்கணிப்பு முடிவுகளை நிறுத்தி வைக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

