நடிகர் சூர்யாவின் 45வது படமாக உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஜி.கே. விஷ்ணு மேற்கொண்டுள்ள நிலையில், சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவருடன் திரிஷா, நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.நீண்ட நாட்களாக ரிலீஸ் குறித்து காத்திருந்த இந்த படம், இறுதியாக வருகிற மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளன.
இந்த சூழலில், 'கருப்பு' படத்தின் அடுத்த பாடல் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமூக வலைதளத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
பாடலாசிரியரும் பாடகருமான பால் டப்பாவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்ட அவர், அடுத்த பாடலும் அவரின் குரல் மற்றும் வரிகளில் உருவாகியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளார்.
இதனால், 'கருப்பு' படத்தின் அடுத்த பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

