சீனாவின் ஹுனான் மாகாணத்தில் அமைந்துள்ள லியுயாங் பகுதி, உலகப் புகழ்பெற்ற பட்டாசு உற்பத்தி மையமாகத் திகழ்கிறது.
சீனாவில் உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளில் சுமார் 60 சதவீதமும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பட்டாசுகளில் 70 சதவீதமும் இங்கு தயாரிக்கப்படுவது அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வெடிப்பு தாக்கத்தால் தொழிற்சாலை கட்டிடங்கள் சிதறி தரைமட்டமாகி, சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கனமான புகை மூட்டத்தில் மூழ்கின.
இதையடுத்து மீட்பு குழுக்கள் விரைவாகச் செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 61 பேர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றிய 3 கிலோமீட்டர் வரம்புக்குள் வசித்து வந்த மக்கள் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்த துயர சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Seithi Punal
