தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து களமிறங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பின்னடைவை சந்தித்துள்ள சூழலில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ இன்று முன்னாள் முதலமைச்சர் மு.க.
ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, மு.க. ஸ்டாலின் அறிவித்த மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவது தற்போது வெற்றி பெற்ற த.வெ.க. கட்சியின் பொறுப்பாகும் என வலியுறுத்தினார்.
மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் இந்த மண்ணில் வேரூன்றி வளர, பல தலைமுறைகள் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.1962-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் 50 இடங்களில் வெற்றி பெற்றிருந்தபோதிலும், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா தோல்வியடைந்த காரணத்தால் அந்த வெற்றியை கொண்டாடாமல் இருந்த வரலாற்றை வைகோ எடுத்துக்காட்டினார்.
அதேபோன்று, பல முன்னோடியான திட்டங்களை அறிவித்து முன்னுதாரணமான ஆட்சியை வழங்கிய தலைவர் ஸ்டாலின் இந்த முறை வெற்றி பெறாதது, அக்காலத் தேர்தல் மனநிலையை நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தை விட அதிக இடங்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் வழங்கியுள்ள இந்த தீர்ப்பை தாங்கள் மதிப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.
அதே நேரத்தில், "தி.மு.க. கூட்டணியை யாராலும் குலைக்க முடியாது. த.வெ.க.க்கு ஆதரவு அளிக்கும் சூழல் இல்லை. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதே அணியிலேயே தொடரும்" எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலினை, த.வெ.க. வேட்பாளர் வி.எஸ். பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்க அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.
Seithi Punal
