தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் கூட்டணி ஆட்சி உருவாகும் சூழல் வலுப்பெற்று வருவதால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.

இந்த அரசியல் நகர்வை முன்னிட்டு, பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் விஜய் நீண்ட நேர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கலந்துரையாடலில், ஆட்சி அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் வரை, கட்சியின் வெற்றி வேட்பாளர்களை சென்னையிலேயே தங்க வைக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தில் உள்ள உயர்தர நட்சத்திர விடுதிகளில் அவர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, சென்னையில் சொந்த வீடு கொண்டுள்ளவர்கள் தங்களது இல்லங்களிலேயே தங்கிக் கொள்ளலாம் என த.வெ.க. தலைமை தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

