Dailyhunt
திமுக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு: மம்தா பானர்ஜி பகிரங்கக் குற்றச்சாட்டு!

திமுக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு: மம்தா பானர்ஜி பகிரங்கக் குற்றச்சாட்டு!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி மீது மிகக் கடுமையான அரசியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் தமிழகத்திற்குத் தேர்தல் பார்வையாளர்களாக இடமாற்றம் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக, திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே ஒரு 'ரகசிய உடன்பாடு' ஏற்பட்டுள்ளதாக அவர் மம்தா தெரிவித்துள்ளார்.

நதியா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மேற்கு வங்கத்தின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகச் சாடினார். "ஏன் மேற்கு வங்க அதிகாரிகள் அனைவரும் தமிழகத்திற்கு மட்டும் அனுப்பப்படுகிறார்கள்? அங்குள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் பாஜக ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளது. அதற்கு கைமாறாக, மேற்கு வங்கத்தில் தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை நியமித்துத் தேர்தலைச் சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது" என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் சூழலில், திறமையான அதிகாரிகளைத் திட்டமிட்டு அப்புறப்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டினார். இது ஒரு 'தர்மயுத்தம்' என்று குறிப்பிட்ட மம்தா, பாஜகவின் இத்தகைய சூழ்ச்சிகளுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் எச்சரித்தார். குறிப்பாக, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் இந்தத் திடீர் இடமாற்றம் மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சிப் பணிகளைப் பாதிக்கும் என அவர் கவலை தெரிவித்தார்.

தேசிய அளவில் 'இந்தி' (I.N.D.I.A.) கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் மீது, அக்கூட்டணியின் மற்றொரு முக்கியத் தலைவரான மம்தா பானர்ஜி இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் கைப்பாவையாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அவர் மீண்டும் ஒருமுறை தனது உரையில் வலியுறுத்தினார். இத்தகைய அதிகாரப் பகிர்வு மற்றும் ரகசிய உடன்பாடுகள் மூலம் தேர்தலைச் சந்திக்க நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என்றும் அவர் தனது உரையில் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal