கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் . காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியினரே போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் பல கட்ட பேச்சுவார்த்தைகளை கடந்து தொகுதி பங்கீட்டில் 28 தொகுதிகளை பெற்றது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 06 தொகுதிகளில், திமுக 02 தொகுதிகளிலும், சிபிஎம் 01 தொகுதிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள குளச்சல் தொகுதியில் தாரகை கத்பர்ட், கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ மற்றும் விளவங்கோடு தொகுதியில் புதுமுகமான T.T. பிரவீன் என 03 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
அதன்படி, விளவங்கோடு தொகுதியில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் உள்ளூர் நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு, கேரளாவைச் சேர்ந்த T.T. பிரவீன் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.மேலிடத்தின் இந்த முடிவிற்கு எதிராக உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் வீதியில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்ததோடு, 'பணம் கொடுத்து சீட் வாங்கிய வெளிமாநில வேட்பாளர் எங்களுக்கு வேண்டாம்' என முழக்கமிட்டு வருகின்றனர். அத்துடன், வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் இருக்கும் விளவங்கோடு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரவீனின் செயல்பாடுகள் பெரும்பாலும் கேரள மாநிலத்திலேயே இருப்பதால் அவர் மீது இப்படியான விமர்சனம் எழுந்துள்ளது.
அதேபோன்று மேலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. உட்கட்சி மோதலின் வெளிப்பாடகவே அதன் வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
Seithi Punal
