பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் விவாகரத்து செய்யப்போவதாக நீண்டகாலமாகப் பரவி வந்த வதந்திகளுக்கு, அபிஷேக் பச்சன் தனது சமீபத்திய பேட்டியின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரபல ஊடகவியலாளர் லில்லி சிங்கிடம் வழங்கிய நேர்காணலில், தமது திருமண வாழ்க்கை குறித்து அபிஷேக் பச்சன் மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது,
எங்கள் உறவு ஆரம்பம் முதலே சமத்துவம் மற்றும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் அமைந்தது. ஒருவர் மட்டும் வேலைக்குச் செல்வது, மற்றொருவர் வீட்டைக் கவனிப்பது என்ற பாகுபாடு எங்களிடையே எப்போதும் இருந்ததில்லை. அத்தகைய திருமண உறவில் இருக்க நான் விரும்பவும் மாட்டேன்.
தனது தந்தை அமிதாப் பச்சன் மற்றும் தாய் ஜெயா பச்சன் திருமணமானபோது, தனது தந்தையை விடத் தாயே பெரிய நட்சத்திரமாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அபிஷேக், ஒரு உறவில் யார் அதிக வெற்றிகரமானவர் என்பது முக்கியமல்ல என்று குறிப்பிட்டார்.
எனது வெற்றிக்காக எனது மனைவி தனது வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. மற்றவர் தோற்றால்தான் நான் ஜெயிக்க முடியும் என்று நினைக்கும் ஆள் நான் அல்ல. என் மனைவியும் இதையே நம்புகிறார்; அதுவே எங்களது பலம் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
'தாய் அக்ஷர் பிரேம் கே' திரைப்படப் படப்பிடிப்பின் போது தங்களுக்குள் நட்பு உருவானதாகவும், அந்த ஆழமான நட்பே பின்னாளில் உறுதியான திருமண உறவாக மாறியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். 2007-ல் திருமணமான இந்தத் தம்பதி, தற்போது தங்களது 19-வது திருமண ஆண்டை நெருங்கி வருகின்றனர்.
தங்களது மகள் ஆராத்யாவின் வளர்ப்பு குறித்துப் பேசிய அவர், "குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு வளர்வதை விட, நம்மைப் பார்த்துதான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, பெற்றோர் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். நாங்கள் இருவரும் ஆராத்யாவுக்குச் சிறந்த பெற்றோராக இருக்க எங்களை எப்போதும் மெருகேற்றிக் கொள்கிறோம்," என்றார். மேலும் தொடர்ச்சியான விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், மரியாதை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தங்களது பிணைப்பு இன்றும் உறுதியாக இருப்பதை அபிஷேக் பச்சனின் இந்தப் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

