ஈரான் போருக்காக அமெரிக்கா இதுவரை சுமார் 25 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாகப் பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்தப் போர் குறித்த முழுமையான நிதி விவரங்களை, பென்டகனின் தற்காலிக கணக்காய்வாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதே நேரத்தில், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பட்ஜெட்டை 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டுகளை விட 40% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், போரை விட உள்நாட்டு அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற பேச்சுகளே தங்களுக்குப் பெரிய சவாலாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த மோதலால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலக அளவில் எரிசக்தி விலை உயர்ந்துள்ளது. தற்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடற்படை முற்றுகையின் மூலம் ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு வரக் கட்டாயப்படுத்தி, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

