ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள நடான் பகுதியில், ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு சிறுவன் தனது சொந்த தாயின் தங்க நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தச் சிறுவன் திருடிய நகைகளை தனது நண்பன் கிரிஷ் மற்றும் அவனது சகோதரியிடம் கொடுத்துள்ளான். அவர்கள் இருவரும் அந்த நகைகளை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து சுமார் 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தைக் கொண்டு சொகுசாக வாழ்ந்ததோடு, விலையுயர்ந்த ஐபோனையும் வாங்கியுள்ளனர்.
வீட்டில் நகைகள் காணாமல் போனதை அறிந்த தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்தச் சிறுவனின் நண்பர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களை விசாரித்தபோது, அவர்கள் நகைகளை அடகு வைத்தது உறுதியானது. இறுதியில் அந்தச் சிறுவனே தனது தாயின் நகைகளைத் திருடி நண்பர்களிடம் கொடுத்தது அம்பலமானது. போலீசார் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டதோடு, இந்த விபரீத செயலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

