டெல்லியில் வாலிபர் ஒருவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அந்தத் தகவலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுப் பெருமை பேசிக்கொண்ட 18 வயது இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
வடமேற்கு டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் 20 வயதான நிதேஷ் என்ற இளைஞருக்கும், கரண் குமார் (18) என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கரண் குமார், தனது நண்பர்களான மாண்டி (22) மற்றும் ஒரு சிறுவனுடன் சேர்ந்து நிதேஷை சரமாரியாகக் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த நிதேஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
குற்றத்தைச் செய்த பிறகு, தன்னை ஒரு 'புகைப்படக் கலைஞர்' என அழைத்துக்கொள்ளும் கரண் குமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (ID: villain_dad_ok_109) ஒரு வீடியோவை வெளியிட்டார். சுமார் 1,500 பின்தொடர்பாளர்களைக் கொண்ட அவர், அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது, இப்போது இரவு 11:22 மணி ஆகிறது. உங்கள் சகோதரன் ஒரு கொலை செய்துவிட்டான். இதற்காக நான் சில நாட்கள் சிறைக்குச் செல்லப் போகிறேன். உங்கள் அன்பை தொடர்ந்து எனக்குக் கொடுத்துக் கொண்டே இருங்கள் என்று எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி சகஜமாகப் பேசியுள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே, தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் ரகசியத் தகவல்கள் அடிப்படையில் செயல்பட்ட டெல்லி போலீசார், கரண் குமார் உட்பட மூன்று பேரையும் 4 மணி நேரத்திற்குள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கைதானவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு கொலையைச் செய்துவிட்டு அதை விளம்பரப்படுத்திய இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

