ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே வெடித்துள்ள போர் 34-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், "அடுத்த 2 முதல் 3 வாரங்களில் ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தன. ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்துத் தீவிரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
ஈரான் போரில் இருந்து அமெரிக்கா விரைவில் வெளியேறும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த அதிபர் டிரம்ப், இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது, இலக்கை நெருங்குகிறோம்: ஈரானில் நாங்கள் நிர்ணயித்த இலக்குகளை நெருங்கிவிட்டோம். இந்தப் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்.
அடுத்த 2 முதல் 3 வாரங்களில் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையானத் தாக்குதல்கள் நடத்தப்படும். ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கவும், சர்வதேசக் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்யவும் மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.
ஈரானை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறிய கருத்துக்கு ஈரான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"ஈரானின் ராணுவ பலத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் தவறாக மதிப்பிட்டுவிட்டன. அவர்கள் பேரழிவைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்கா அவமானப்பட்டு, நிரந்தர வருத்தத்துடன் சரணடையும் வரை இந்தப் போர் தொடரும்," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

