ஈராக் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த ஈரானின் ஷாஹித் ரக ஆளில்லா விமானங்களை அமெரிக்காவின் எப் 15 போர் விமானம் ஒன்று துரத்திச் செல்லும் பரபரப்பான காணொளி தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் அர்பில் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் மோட்டார் ஆயில் நிறுவனத்தின் ஆலை மீது ஈரான் நடத்திய தாக்குதலின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன அமெரிக்கப் போர் விமானம் வெறும் இருபதாயிரம் டாலர் மதிப்புள்ள ஈரானின் மலிவான ட்ரோன்களை இடைமறிக்க முடியாமல் திணறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அந்த எண்ணெய் ஆலையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டு வான் உயரே கரும்புகை சூழ்ந்த நிலையில் அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகள் இது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
பிரிட்டிஷ் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பிரிட்டனுக்கான ஈரான் தூதர் செய்யது அலி மூசாவி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அர்பில் பகுதியில் உள்ள கேஸ்ட்ரோல் எண்ணெய் ஆலை மீது அடுத்தடுத்து மூன்று ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.
ஈரான் ஆதரவு சமூக வலைதளப் பக்கங்கள் அமெரிக்கப் போர் விமானத்தின் தோல்வியைக் கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றன. ஏவுகணைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அமெரிக்கப் போர் விமானம் ஈரானின் சிறிய ட்ரோன்களை வீழ்த்தத் தவறியது சர்வதேச ராணுவ நிபுணர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ஈரானின் இந்தத் துணிச்சலான நடவடிக்கை உலக நாடுகளை உற்று நோக்கச் செய்துள்ளது.

