அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில், ஈரான் அதிபர் அமெரிக்காவிடம் போர் நிறுத்தத்திற்காகக் கெஞ்சுவதாகப் பதிவிட்டது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தால் மட்டுமே போர் நிறுத்தம் பற்றி யோசிப்போம்" என்று தான் நிபந்தனை விதித்துள்ளதாகவும் டிரம்ப் மார்தட்டியிருந்தார்.
ஆனால், டிரம்பின் இந்த அதிரடி கருத்தை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அப்பட்டமான பொய் என்றும், இது முற்றிலும் ஆதாரமற்றது என்றும் கூறி நிராகரித்துள்ளது. "நாங்கள் யாரிடமும் போர் நிறுத்தம் கேட்கவில்லை" என்று ஈரான் கறாராகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "ஈரான் மக்களை மிரட்ட முடியாது, எங்களைப் பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு காலக்கெடு எதுவும் தேவையில்லை" என்று ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்கா விரைவில் போரிலிருந்து வெளியேறும் என்று டிரம்ப் ஒருபுறம் கூறினாலும், ஈரானை முழுமையாக முடக்கும் வரை தாக்குதல் தொடரும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுஆயுதக் கனவு தகர்க்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் உரிமை கொண்டாடும் நிலையில், ஈரான் தொடர்ந்து போர் முனையில் உறுதியாக நின்று வருவது மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

