சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில், மாரடைப்பால் இதயம் துடிப்பதை நிறுத்திய ஒரு நோயாளிக்கு 'ECMO' என்ற நவீன கருவி மூலம் மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
சுமார் 40 மணி நேரம் இதயம் செயலிழந்த நிலையில் இருந்த அவருக்கு, மின் அதிர்ச்சிகள் கொடுத்தும் பலன் அளிக்காததால், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் போல செயல்படும் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டது.
இரத்தத்தில் ஆக்சிஜனை ஏற்றி மீண்டும் உடலுக்குள் செலுத்தும் இந்த முறையில், நோயாளி பிழைப்பதற்கான வாய்ப்பு 1 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்கிறது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 20 நாட்கள் சிகிச்சையில் அந்த நோயாளி குணமடைந்து வீடு திரும்பினார்.
இருப்பினும், இந்த உயிர்காக்கும் சிகிச்சை மிகவும் செலவுமிக்கதாக இருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்தைப் பொருத்த ஆரம்பக்கட்டமாக சுமார் ₹7 லட்சமும், பின்னர் தினசரி செலவாக ₹1.4 லட்சமும் தேவைப்படுவதால், சாதாரண மக்களால் இதனைப் பயன்படுத்த முடியாது என்ற கவலை எழுந்துள்ளது.
காப்பீட்டுத் திட்டங்களிலும் இது சேர்க்கப்படாதது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. இதைக் குறிப்பிட்ட மருத்துவர் லூ, மருத்துவ முன்னேற்றம் மற்றும் நோயாளியின் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் இணைந்ததாலேயே இந்த அதிசயம் சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார்.

