மத்திய கிழக்கில் ஏற்கனவே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இதற்குப் பாகிஸ்தான், துருக்கி, சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட ஏழு முக்கிய முஸ்லிம் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்தச் சட்டம் சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு எதிரானது என்றும், இது பாலஸ்தீனியர்களைக் குறிவைக்கவே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்த நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு அடிப்படை உணவு மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகள் அமைதிப் பேச்சுவார்த்தையைச் சீர்குலைத்து, அப்பகுதியில் நிலவும் மோதலை மேலும் மோசமாக்கும் என்று எச்சரித்துள்ள அந்த நாடுகள், சர்வதேச சமூகம் இதில் தலையிட்டு அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. இச்சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

