தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், எந்தத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
சென்னை பெரம்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்து நின்றவர்களை வீழ்த்தி சாதனை படைத்த விஜய், அத்தொகுதியைத் தனக்காக விட்டுக்கொடுத்த மாவட்டச் செயலாளர் சிவாவிற்கு மீண்டும் வழங்கத் திட்டமிட்டிருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்கள் திருச்சி கிழக்கில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உறுதி செய்கின்றன.
திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, அங்கு நேர்மையான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தைக் களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. சகாயத்தை வெற்றி பெற வைத்து, தமிழகத்தில் கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் புதிய துறையை உருவாக்கி அவரை அமைச்சராக்க விஜய் வியூகம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்ட மக்களின் அமோக ஆதரவைப் பெற முடியும் என தவெக நம்புகிறது. ஒருவேளை இது சாத்தியப்படாவிட்டால், லால்குடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அல்லது அவரது மகன் சிரஞ்சீவி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

