தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரியில் தற்போது தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். புதுச்சேரியில் ஏற்கனவே 30 வேட்பாளர்களை விஜய் அறிவித்த நிலையில் அவர் மொத்தம் 23 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டிருந்தார்.
ஆனால் 19 தொகுதிகளில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டும்தான் அனுமதி கொடுக்கப்பட்டது. நடிகர் விஜய் தமிழ்நாட்டில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அங்கு வேட்பு மனு தாக்கல் செய்து தன் பிரச்சாரத்தை முடித்த நிலையில் தற்போது புதுச்சேரியில் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார்.
அவர் செல்லும் வழியெல்லாம் இருசக்கர வாகனங்களில் தொண்டர்களும் ரசிகர்களும் பின்தொடர்ந்து உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில் நடிகர் விஜயின் வாகனத்தை பின்தொடர கூடாது என பலமுறை கட்சியின் தலைமை அறிவுறுத்தியும் அதனை தமிழக வெற்றிக்கழகத்தினர் காதில் போட்டுக்கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. மேலும் இந்த நிலையில் நடிகர் விஜய்யின் வாகனத்தின் மீது ஏறி ரசிகர்கள் அட்டகாசம் செய்யும் நிலையில் தொடர்ந்து விஜயை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது போலீசார் தடியடி நடத்தியும் இரு சக்கர வாகனங்களின் சாவியை பறிமுதல் செய்தும் கூட்டத்தை கலைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

