ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் போர் பதற்றம், உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
இது குறித்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரானின் உயர்மட்டத் தலைவர் பிரதிநிதி அப்துல் ஹக்கீம் இலாஹி கூறுகையில், "பாகிஸ்தான் முன்வைத்துள்ள மத்தியஸ்தம் குறித்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது. இஸ்லாமாபாத் வழியாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைத் தக்கவைக்கவே இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன," எனத் தெரிவித்தார்.
ஈரான் தனது எல்லைக்குட்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக முற்றுகையிட்டுள்ளது. இதனால் பல நாடுகளுக்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத ஈரான், "எதிரி நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது" என்று அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்தியக் கப்பல்கள் மட்டும் எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பாக தாயகம் திரும்பி வருகின்றன. மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது.

