ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக சர்வதேச சந்தையில் நிலவும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 5 கிலோ எடை கொண்ட சிறிய எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் எரிபொருள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் ஏற்படும் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், குறிப்பாக நகரப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் நலன் கருதியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சிலிண்டர் ஒதுக்கீட்டை மத்திய அரசு இரட்டிப்பாக்கியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 5 கிலோ சிலிண்டர், 'சோட்டு' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இதன் முக்கிய நன்மைகள் பின்வருமாறு, சாதாரண கேஸ் இணைப்பிற்குத் தேவைப்படும் நிரந்தர முகவரி சான்று இதற்குத் தேவையில்லை. ஆதார் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து, இந்த சிலிண்டரை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். முறையான ஆவணங்கள் இல்லாததால், தொழிலாளர்கள் கறுப்புச் சந்தையில் அதிக விலை கொடுத்து கேஸ் வாங்குவதைத் தவிர்க்க இந்தத் திட்டம் உதவுகிறது. தொழிலாளர்கள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்குச் செல்லும்போது, சிலிண்டரைத் திருப்பி அளித்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
மேலும் நகர மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்கள், எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் ஒதுக்கீடு அதிகரிப்பு, கறுப்புச் சந்தையில் சிலிண்டர் விற்பனையாவதைக் கட்டுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

