மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிய குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையவும், தங்கள் வழியாகப் பயணம் செய்யவும் ஐக்கிய அரபு அமீரகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
அதன்படி எமிரேட்ஸ் (Emirates), எதிஹாட் (Etihad) மற்றும் ஃபிளை துபாய் (FlyDubai) ஆகிய மூன்று முன்னணி சர்வதேச விமான நிறுவனங்கள் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஈரானிய கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்கள் இனி ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையவோ அல்லது அதன் வழியாக மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அமீரக அரசு இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29), ஈரானிலிருந்து ஏவப்பட்ட 16 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 42 ஆளில்லா விமானங்களை (Drones) அமீரக வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்தது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரானின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 414 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,914 ஆளில்லா விமானங்கள் வான் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடையைத் தொடர்ந்து, துபாயில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த ஈரானிய மருத்துவமனை மற்றும் ஈரானிய கிளப் ஆகிய இரண்டு சமூக அமைப்புகளும் மூடப்பட்டுள்ளன. இவை ஷா மன்னர் காலத்திலிருந்தே அமீரகத்தில் செயல்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மேற்கு ஆசியப் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமான 'ஜெட் புளூ' தனது பயணிகளுக்கான லக்கேஜ் கட்டணத்தை 9 டாலர் வரை உயர்த்தியுள்ளது.

