இந்தியாவுக்கு வரவேண்டிய ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல், பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகச் சீனாவுக்குத் திருப்பி விடப்பட்டதாக வெளியான செய்திகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இத்தகைய செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ள அரசு, இந்தியா 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தங்குதடையின்றி கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருவதாகவும், நாட்டின் எண்ணெய் விநியோகம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது.
எண்ணெய் வர்த்தகத்தில் கப்பல்கள் தங்கள் பயணத்தின் நடுவே பாதையை மாற்றுவது என்பது வணிக ரீதியான முடிவே தவிர, இதில் பணப் பரிமாற்றச் சிக்கல்கள் ஏதுமில்லை என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், 'சீ பேர்ட்' என்ற ஈரானிய எல்பிஜி கப்பல் ஏற்கனவே மங்களூர் துறைமுகத்திற்கு வந்து தனது சரக்குகளை இறக்கி வருவதையும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
வரும் மாதங்களுக்கான இந்தியாவின் எரிசக்தித் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

