உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் சர்மாவின் மகள் பிரணிதா வசிஷ்டாவிற்கும் ராணுவ மேஜர் ஒருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கணவர் வீட்டில் பிரணிதாவிற்குத் தொடர்ந்து உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பிரணிதா விவாகரத்து கோரி மீரட் குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து அவருக்கு அண்மையில் விவாகரத்து வழங்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்த பிரணிதாவை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்று ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிகழ்வின் போது ஓய்வுபெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தனது மகளை நேசிப்பதாகக் குறிப்பிடும் வாசகங்கள் அடங்கிய கருப்பு நிற ஆடை அணிந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இது குறித்துப் பேசிய அவர் தனது மகள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இல்லாத போது அந்தச் சூழலிலிருந்து அவரை மீட்டு வருவது ஒரு தந்தையாகத் தனது கடமை என்று தெரிவித்தார்.
சமூகத்தின் எதிர்பார்ப்புகளை விட மகள்களின் மகிழ்ச்சிக்கும் கண்ணியத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் விவாகரத்து பெற்ற பிரணிதா பேசுகையில் துன்புறுத்தல்களைச் சந்திக்கும் பெண்கள் மௌனமாக இருக்காமல் தங்களுக்காகத் தாங்களே எழுந்து நிற்க வேண்டும் என்றும் கல்வி மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

