பிரிட்டனில் தனது முன்னாள் காதலியின் மீது தீராத கோபம் கொண்ட ஆசாத் உசேன் (36) என்ற நபர், பழிவாங்குவதற்காகச் செய்த கொடூரமான செயல் உலகையே அதிரவைத்துள்ளது.
அந்தப் பெண்ணின் பெயரில் போலியான 'டேட்டிங்' கணக்குகளைத் தொடங்கிய அந்த நபர், அதில் வன்முறையைத் தூண்டும் விதமான வாசகங்களை எழுதி, அறிமுகமில்லாத ஆண்களை அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் விளைவாக, சுமார் 18 ஆண்கள் அடுத்தடுத்து அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று தொல்லை கொடுத்துள்ளனர். ஒரு நாள் இரவில் மட்டும் நான்கு ஆண்கள் அவர் வீட்டுக்கு வந்துள்ளனர்; இதில் ஒருவர் வீட்டின் கதவை உடைக்க முயன்றதோடு, மற்றொருவர் வீட்டிற்குள்ளேயே நுழைந்த சம்பவம் அந்தப் பெண்ணையும் அவரது மகளையும் மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியது.
ஆசாத் உசேன் தனது அடையாளத்தை மறைக்கப் பல தொலைபேசிகளைப் பயன்படுத்தியதோடு, தனது காரின் நம்பர் பிளேட்டையும் மாற்றியுள்ளார். எனினும், தீவிர விசாரணைக்குப் பிறகு காவல்துறையினர் அவரை ஸ்டாக்கிங் குற்றத்திற்காகக் கைது செய்தனர்.
செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் ஒன்பது நாட்கள் நடந்த விசாரணையில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது முன்னாள் காதலியின் வாழ்க்கையைச் சிதைக்கத் திட்டமிட்டுச் செயல்பட்ட இந்த நபருக்கான தண்டனை விவரம் வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்பட உள்ளது.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

