எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்.சி.பி மற்றும் சி.எஸ்.கே அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்திற்கு இடையே, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நகைச்சுவை சம்பவம் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
போட்டியின் இடையே வழங்கப்பட்ட 'ட்ரிங்ஸ் இடைவேளையின்' போது இந்த ருசிகர சம்பவம் அரங்கேறியது. ஆர்.சி.பி அணியின் மூத்த வீரரும் ஆலோசகருமான தினேஷ் கார்த்திக், களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ரஜத் படிதார் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோருக்குத் தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்.
வீரர்கள் தண்ணீர் குடிப்பதற்கு முன்பாகவே, களத்தில் இருந்த நடுவர்களில் ஒருவர், தினேஷ் கார்த்திக் வைத்திருந்த பெட்டியிலிருந்து ஒரு பாட்டிலை சட்டென்று எடுத்துக்கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரஜத் படிதார், தனது பாட்டிலைக் காணவில்லை என்பது போல நடுவரிடம் கேள்வி எழுப்பினார். தான் பிடிபட்டுவிட்டதை உணர்ந்த நடுவர், உடனடியாகப் பாட்டிலைத் திரும்பக் கொடுத்தார். இந்த 'தண்ணீர் திருட்டு' காட்சிகள் மைதானத்தில் இருந்த கேமராக்களில் துல்லியமாகப் பதிவாகின.
நடுவரின் இந்தச் செயலைக் கண்ட ஆர்.சி.பி கேப்டன் ரஜத் படிதார், சக வீரர்களுடன் இணைந்து நடுவர்களை நோக்கிச் சைகை காட்டி கிண்டல் செய்தார். ஆர்.சி.பி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவர், வீரர்களின் இந்த கேலியைக் கண்டு டக்-அவுட்டில் அமர்ந்து விழுந்து விழுந்து சிரித்தார். வீரர்கள் மற்றும் நடுவர்களுக்கு இடையே நடந்த இந்த வாக்குவாதம் மைதானத்தில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தை 'டிரிங்க்ஸ்-கேட்' என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். வீரர்களுக்குக் கொடுப்பதற்கு முன்னால், தண்ணீர் தரமானதா என்று நடுவர் 'குவாலிட்டி செக்' செய்கிறார் என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் 2026-ன் மிகச்சிறந்த நகைச்சுவை தருணம் இதுதான்" எனப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். பரபரப்பான ஆட்டத்திற்கு நடுவே, இத்தகைய சிறு நகைச்சுவை நிகழ்வுகள் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் புத்துணர்ச்சியை அளித்துள்ளன.

