நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், தவெக-விற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள், திமுக - காங்கிரஸ் இடையேயான நீண்டகால கூட்டணியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் பலர் விஜய்யின் தவெக-விற்கு ஆதரவு தெரிவிக்க விருப்பம் காட்டியுள்ளதாகவும், இதற்காக விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் தரப்பிலிருந்து விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் நகர்வு திமுகவினரை கடும் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. இது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸின் இந்த முடிவை மிகக் கடுமையாகச் சாடினார். அவர் கூறியதாவது, வெறும் 2 அமைச்சர் பதவிகளுக்கு ஆசைப்பட்டு, நாடு முழுவதும் காங்கிரஸை மூட முடிவெடுத்து விட்டார்களா? தவெக-வை ஆதரிக்கும் காங்கிரஸின் முடிவு திமுகவின் முதுகில் குத்திய செயல் அல்ல. மாறாக தங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களின் முதுகில் குத்திய செயல். இனி காங்கிரஸை யாரும் நம்ப மாட்டார்கள்.
இந்த முடிவை காங்கிரஸ் தலைமை எடுத்திருந்தால், அவர்களே வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே? ஏன் அச்சப்பட வேண்டும்? இந்த முடிவு தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் போன்ற தலைவர்களிடையே காங்கிரஸ் மீது நம்பிக்கையற்ற தன்மையை உருவாக்கும். தேசிய அளவில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைமை இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வரும் நிலையில், திமுகவின் இந்த நேரடித் தாக்குதல் தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கைகொடுக்குமா அல்லது திமுகவின் எதிர்ப்பால் பின்வாங்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.

