நடப்பு ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆடிய அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் உலுக்கியுள்ளது.
வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, கிரிஸ் கெயிலின் அதிவேக சத சாதனையை முறியடிக்கும் விளிம்பிற்கு வந்த வைபவ், துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
இருப்பினும், 330-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் அவர் ஆடிய இந்த அதிரடி ஆட்டம் இந்தியாவைத் தாண்டி அண்டை நாடான பாகிஸ்தானிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான பாசித் அலி தனது யூடியூப் பக்கத்தில் வைபவ்வை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில்,
"கிறிஸ் கெய்ல் 'மிஸ்டர் யுனிவர்ஸ்' ஆக இருக்கலாம். ஆனால், இந்த சிறுவன் இப்போது 'மிஸ்டர் யுனிவர்ஸ்' ஆகிவிட்டான். காம்ப்ளான் குடித்து வளரும் இந்த 'பப்ளு' (வைபவ்), எதிர்காலத்தில் கிறிஸ் கெய்லின் சாதனையை நிச்சயம் முறியடிப்பார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது உலகம் முழுவதும் இவரது பெயர் ஒலிக்கும்," என்று உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி வீரர் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் அடித்ததே ஐபிஎல் வரலாற்றில் மிக அதிவேக சதமாகும். வைபவ் 28 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தபோது, அந்த சாதனையை முறிக்க ஒரு பெரிய ஷாட் அடிக்க முயன்று பிரஃபுல் ஹிங்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'
பாகிஸ்தானின் விளையாட்டு ஆய்வாளர் முகமது மொஹ்சின், வைபவ்வின் திறமை கடவுள் கொடுத்த பரிசு என்று குறிப்பிட்டுள்ளார். "இப்படி ஒரு பேட்டிங்கை நான் பார்த்ததும் இல்லை, நினைத்துப் பார்த்ததும் இல்லை. பேட் கம்மின்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களைக் கூட அவர் மிகச் சாதாரணமாக எதிர்கொண்டார். 97 ரன்களில் இருந்தபோது சுயநலமின்றி, சதத்தைப் பற்றி கவலைப்படாமல் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தையே விளையாடினார்," என்று அவர் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தான் விளையாட்டுத் தொகுப்பாளர்கள் சிலர், "இவரது 350+ ஸ்டிரைக் ரேட் ஆட்டத்தைப் பார்த்து, இந்த சிறுவன் நிஜமானவரா அல்லது ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவரா என்று உலகம் குழம்பியுள்ளது" என வியந்து பேசியுள்ளனர். அதே வேளையில், பாகிஸ்தானின் மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர் அப்துல் கஃபார், வைபவ்வின் வயது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளார். வைபவ்வுக்கு 15 வயது தான் ஆகிறது என்பதை நம்ப முடியவில்லை என்றும், உள்நாட்டு மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், சர்வதேச கிரிக்கெட் போட்டியே அவரது திறமைக்கான உண்மையான சோதனையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்நாட்டு ரசிகர்கள் விபிஎன் (VPN) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வைபவின் ஆட்டத்தைக் கண்டு ரசித்துள்ளனர். வைபவின் இந்த அச்சமற்ற பேட்டிங் திறமை, சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்த பெரும் மைல்கல்லாக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், அவரது வயது குறித்த சில விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

