தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்திற்காக புதுச்சேரி நோக்கிச் சென்றபோது, அவரது காரைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கார் மீது ஏறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை விஜய் இன்று மேற்கொண்டார். அவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் கடந்தபோது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் விஜய்யின் கார் மெதுவாகச் சென்றது. அப்போது, விஜய்யைக் கண்ட உற்சாகத்தில் சில ரசிகர்கள் திடீரென அவரது காரின் முன்பகுதியிலும் (), கூரை மீதும் ஏறினர். காரின் மீது அமர்ந்தவாறு அவரோடு செல்பி எடுக்க முயன்றனர்.
நெரிசலுக்கு இடையே சில ரசிகர்கள் காரின் கண்ணாடி வழியாக விஜய்க்கு முத்தம் கொடுக்க முயன்றதால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. இதனால் அவரது கார் மேற்கொண்டு நகர முடியாமல் சிறிது நேரம் தடைபட்டது.
மேலும் ரசிகர்களின் இந்த அதீத அன்பால் காரின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட விஜய்யின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், கார் மீது ஏறியவர்களைக் கீழே இறக்கிவிட்டு கூட்டத்தை அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, ஒருவாறாகக் கூட்டம் சீரமைக்கப்பட்டு விஜய்யின் கார் புதுச்சேரி நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

