மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் நிகழ்ந்த கோரமான படகு விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
பலத்த சூறாவளி மற்றும் மோசமான வானிலை காரணமாக சுமார் 30 பயணிகளுடன் சென்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் மீட்புப் பணியின் போது, உயிரிழந்த ஒரு தாயும் அவரது நான்கு வயது மகனும் ஒருவரையொருவர் இறுக்க அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட காட்சி காண்போரின் கண்களைக் குளமாக்கியது. அந்தத் தாயின் இறுதி மூச்சு வரை தன் குழந்தையைக் காக்கப் போராடிய அந்த உருக்கமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, இணையவாசிகளைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
">
இந்த விபத்தில் 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டாலும், படகில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் உடைகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் நீர்நிலை சுற்றுலாத் தலங்களில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

