உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையைத் தரைமீது கொடூரமாக அடித்துக் கொலை செய்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த சுமித் என்பவரது மனைவி ரதி. இந்தத் தம்பதிக்கு ஆரவ் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தான். இதற்கிடையில், ரதிக்கும் விராஜ் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரதியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட விராஜ், அதற்கு அவர்களது ஒன்றரை வயது குழந்தை பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ரதி தனது சொந்த ஊரிலிருந்து ஃபிரோசாபாத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு வந்துள்ளார். இந்தத் தகவலை அறிந்த விராஜ், அங்கு சென்றுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆரவ்விற்கு மிட்டாய் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தெருவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத ஆள்நடமாட்டமற்ற சந்துப் பகுதியில் வைத்து, குழந்தையைத் தூக்கி தரைமீது பலமுறை கொடூரமாக அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே அசைவற்றுக் கிடந்துள்ளது. இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை தாக்கப்படைந்ததை அறிந்து பதறியடித்த குடும்பத்தினர், உடனடியாக அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபரீதத்தை உணர்ந்த கொலையாளி விராஜ் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டான். அவனைப் பிடிப்பதற்காகப் போலீஸார் எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச மாநிலத் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா கூறுகையில், "இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

