புதுவையில் பி.பி.ஏ படித்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் கிரிக்கெட் வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர்குமார் என்பவர் சென்னையில் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஏஞ்சல் கங்கவாணி (19), புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக புதுவை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஏஞ்சல் ஒரு அகாடமியில் தீவிரப் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகள் பட்டியலில் ஏஞ்சலின் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஏஞ்சல் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றியபோது, அவர் கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில், என் வாழ்க்கை இவ்வளவு நாள் தான் என்பது கடவுள் எழுதி வைத்தது. என் மரணத்திற்கு நான் தான் காரணம். வேறு யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. அம்மா, அப்பா உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் என உருக்கமாக எழுதியுள்ளார். மேலும் அணியில் தேர்வு செய்யப்படாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெற்றோர் தன்னுடன் இல்லையே என்ற தனிமையில் இந்த முடிவை எடுத்தாரா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

