தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக தவெக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் வெற்றிக் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளனர்.
விரைவில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சூழலில், ராமநாதபுரத்தில் தவெக தொண்டர்கள் செய்த வரம்புமீறிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் பேருந்து நிலையப் பகுதியில் கொட்டும் மழையிலும், காரில் தவெக கொடியுடன் வந்த ஒரு கும்பல், விசில் அடித்து கூச்சலிட்டபடி ஆபத்தான முறையில் 'ஸ்டண்ட்' செய்து ரகளையில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் கார் ஓட்டி அராஜகம் செய்த இவர்களைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், ரகளையில் ஈடுபட்ட 6 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். "வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என போலீஸார் எச்சரித்துள்ளனர். விஜய்யின் அரசியல் வெற்றிக்கு இப்படிப்பட்ட செயல்கள் களங்கம் விளைவிப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

