ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தற்போது தனக்கு இக்கட்டான காலத்தில் உதவிய ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதல் போக்கை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அமீரகம் தனது கடனைத் திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர், அந்த நாட்டை 'அகண்ட பாரத' கனவைக் கூறி எச்சரித்திருப்பது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் அந்த நாட்டுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் என பாகிஸ்தான் திணறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை உயர்த்த அமீரகம் வழங்கிய 3.5 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு அமீரக அரசு அழுத்தம் கொடுத்துள்ளது.
வழக்கமாக, சவூதி அரேபியா மற்றும் அமீரகம் போன்ற நாடுகள் பாகிஸ்தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்கும். ஆனால், இம்முறை அமீரகம் கறார் காட்டியதால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தான் மத்திய வங்கி இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் முஷாஹித் ஹுசைன் இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, பாகிஸ்தான் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவது நல்ல முடிவு. ஏனெனில், அமீரகத்திற்கு இப்போது பணம் மிக அவசியம். ஏமன் மற்றும் சூடான் போர்களில் சிக்கிக்கொண்டுள்ள அந்த நாடு இப்போது 'பாவம்' (Poor UAE). அவர்களுக்குத் தான் நிதி நெருக்கடி உள்ளது.
தொடர்ந்து பேசிய முஷாஹித் ஹுசைன், அமீரகத்தை இந்தியாவைக் காட்டி மிரட்டும் தோனியில் பேசினார். "ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு கோடி மக்கள் தொகையில் சுமார் 43 லட்சம் பேர் இந்தியர்கள். எனவே, அமீரகம் எதிர்காலத்தில் 'அகண்ட பாரதத்தின்' ஒரு பகுதியாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளட்டும்" என அவர் வன்மத்தைக் கக்கியுள்ளார்.
சீனா, சவூதி அரேபியா மற்றும் அமீரகம் ஆகிய நாடுகளின் கடனை நம்பியே பாகிஸ்தான் இயங்கி வருகிறது. இப்போது அமீரகத்திற்கு 3.5 பில்லியன் டாலர்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், பாகிஸ்தானில் பணப்புழக்கம் கடுமையாகப் பாதிக்கப்படும். ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இந்தப் பொருளாதார இடியைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது. மேலும் உதவி செய்த நாட்டையே 'நன்றிகெட்டத் தனமாக' பாகிஸ்தான் விமர்சித்து வருவது வளைகுடா நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

