நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அரசியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது பழைய நண்பர்களை ஒருபோதும் மறப்பதில்லை என்பதற்குச் சான்றாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து நடிகர் ஸ்ரீமன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒருமுறை தூத்துக்குடி விமான நிலையத்தில் ஸ்ரீமன் இறங்கியபோது, அங்கு விஜய்யின் வருகைக்காக லட்சக்கணக்கான மக்கள், ஊடகங்கள் மற்றும் கார்கள் என ஏர்போர்ட்டே ஸ்தம்பித்துக் கிடந்துள்ளது. இந்த நெரிசலுக்கு இடையே ஸ்ரீமன் ஒரு ஓரமாக நின்றிருக்கிறார்.
அப்போது பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் மிக வேகமாக நடந்து வந்த விஜய், கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்ற ஸ்ரீமனைப் பார்த்ததும் சட்டென நின்றுள்ளார். அருகில் வந்து ஸ்ரீமனை அன்புடன் கட்டிப்பிடித்து, "என்னடா இங்க? நல்லா பண்ணு" என்று நலம் விசாரித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கும்போதும், தன்னைச் சுற்றி அத்தனை மக்கள் காத்திருக்கும் நெருக்கடியான சூழலிலும், பழைய நட்புக்கு மரியாதை கொடுத்து விஜய் பேசிய அந்த எளிமை தன்னை நெகிழ வைத்ததாக ஸ்ரீமன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
"இந்த மனசு எல்லாருக்கும் வராது" என ஸ்ரீமன் பாராட்டியுள்ள இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

