வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
30 வயதான பார்த்திபன் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி பிரேமகுமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனவேதனை அடைந்த பிரேமகுமாரி, தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் அருகில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபன், மனைவியை மீட்க உடனே கிணற்றில் குதித்துள்ளார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக கிணற்றில் இருந்த பாறையில் தலை மோதியதில் பார்த்திபன் மயங்கி தண்ணீரில் மூழ்கினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிரேமகுமாரி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பார்த்திபன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலை மீட்டனர்.

