"பெற்ற தாயே தன் மகளுக்கு எமனாக மாறிய" நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
அங்குள்ள குசும்பா கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மி தேவி என்பவர், தனது மகனின் தீராத உடல் மற்றும் மன நலக் குறைபாட்டை குணப்படுத்த ஒரு பெண் மந்திரவாதியை அணுகியுள்ளார்.
அந்த மந்திரவாதி, "ஒரு கன்னிப் பெண்ணை நரபலி கொடுத்தால் உன் மகன் குணமாகிவிடுவான்" என மூளைச்சலவை செய்ய, அந்தப் பாவித் தாய் தன் சொந்த 13 வயது மகளையே பலிகொடுக்கத் துணிந்துள்ளார். ஒட்டுமொத்த ஊரும் ராம நவமி கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நேரத்தில், அந்த அப்பாவிச் சிறுமி மந்திரவாதியின் வீட்டில் வைத்து கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கொடூரக் கொலையை மறைக்க, சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டது போல நாடகமாடி போலீசாரை திசை திருப்ப முயன்றுள்ளனர் அந்தத் தாயும் அவரது கூட்டாளிகளும். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையும், காவல்துறையின் கிடுக்கிப்பிடி விசாரணையும் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தாய் ரேஷ்மி தேவி, மந்திரவாதி சாந்தி தேவி மற்றும் உடந்தையாக இருந்த பீம் ராம் ஆகிய மூவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு தாயே தன் மகனின் உயிருக்காக, மகளை நரபலி கொடுத்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

