மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்திய 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இந்த ஆண்டு ஏப்ரல் மூன்றாவது வாரத்திலேயே வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளை மொத்தம் 43.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் 10-ஆம் வகுப்புத் தேர்வை 25 லட்சம் மாணவர்களும், பிளஸ்-2 தேர்வை 18.5 லட்சம் மாணவர்களும் எழுதியுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மூன்றாவது வாரத்திலேயே முடிவுகளை வெளியிட வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பின்னால் ஒரு முக்கியக் காரணம் உள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி, இந்த ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இரண்டாம் முறை தேர்வு எழுதும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் தேர்வுகள் மே மாதத்தில் நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாகவே முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட சி.பி.எஸ்.இ. நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, அடுத்த வாரத்தில் முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. தேர்வுகளில் தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலங்கானா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு முடிவுகளைத் தமிழக மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் cbse.gov.in, results.nic.in, results.digilocker.gov.in, umang.gov.in இணையதளங்களில் பார்க்கலாம். மாணவர்கள் தங்களின் பதிவு எண் (Roll Number), பள்ளி எண் (School No.), அனுமதி அட்டை அடையாள எண் (Admit Card ID) மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

