உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவிகள் அடிக்கடி விவரிக்க முடியாத காரணங்களால் மயங்கி விழுந்துள்ளனர்.
இதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உயிரிழந்த நேபாள தொழிலாளி ஒருவரின் ஆவிதான் காரணம் என்று கிராம மக்களிடையே பீதி நிலவியது. இந்த ஆவி பயத்தைப் போக்கி, மாணவிகளைக் காப்பாற்ற பள்ளி வளாகத்திலேயே ஒரு சிறிய கோவிலைக் கட்டப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முடிவு செய்தது.
இதற்காக 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 218 மாணவர்களிடம் தலா 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் சுமார் 25,000 ரூபாய்மதிப்பில் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
பள்ளி நிர்வாகத்தின் இந்த நிதி வசூலிப்பு மற்றும் ஆவி குறித்த நம்பிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, விவகாரம் கல்வித்துறையின் கவனத்திற்குச் சென்றது. பள்ளி வளாகத்தில் இதுபோன்ற மூடநம்பிக்கை சார்ந்த செயல்களில் ஈடுபட்டது குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, அரசுப் பள்ளியில் கோவில் கட்டியது மற்றும் நிதி வசூலித்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு, இதற்குகாரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

