தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000-த்தை ரூ.7,500-ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) கீழ், ஓய்வூதியத் திட்டத்திற்காக (EPS) தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து ஒரு பகுதி பிடித்தம் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள ரூ.1,000 ஓய்வூதியம், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அடிப்படை வாழ்வாதாரத்திற்கே போதுமானதாக இல்லை என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.
இந்த ஓய்வூதியத் தொகையை ரூ.7,500-ஆக உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியர் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையை நாடாளுமன்ற நிலைக்குழுவும் ஆதரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.950 கோடி செலவிட்டு வருகிறது. ஒருவேளை இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டால், அரசுக்கான நிதிச்சுமை அதிகரித்தாலும், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பெரும் பயன் அடைவார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஓய்வூதியத் திட்டத்திற்கான பிடித்தம் ரூ.1,250-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், அதற்கேற்ப பயன்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது தொடர்பாக பி.எப். நிறுவன உயரதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடையே ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் பி.எப். நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

