மருத்துவத் துறையில் நிலவும் முறையற்ற வணிகப் போக்குகளுக்கு அடிபணிய மறுத்து, ஒரு இளம் பெண் மருத்துவர் தனது பணியை முதல் நாளிலேயே ராஜினாமா செய்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் முன்னணி மருத்துவமனை ஒன்றில் அதிக ஊதியத்துடன் பணியில் சேர்ந்த அந்த இளம் மருத்துவர், அங்கு நிலவும் அதிர்ச்சிகரமான நடைமுறைகளைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நோயாளிகளின் உயிரைப் பொருட்படுத்தாமல் மருத்துவமனை நிர்வாகம் லாபத்தையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த மருத்துவமனையில் தான் கண்ட விசித்திரமான மற்றும் அறமற்ற முறைகளை அவர் பட்டியலிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவையற்ற நோயாளிகளையும் கட்டாயப்படுத்தி உள்நோயாளிகளாக சேர்க்க நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது. சிகிச்சைக்குத் தேவை இல்லாத போதும், மருத்துவமனை கட்டணத்தை உயர்த்துவதற்காக நோயாளிகளைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) நீண்ட நாட்கள் வைக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் உரிமையாளரான ஒரு மூத்த மகப்பேறு மருத்துவரே, அனைத்து சிகிச்சை முடிவுகளையும் எடுத்துள்ளார். மருத்துவம் சாராத காரணங்களுக்காக நோயாளிகளின் தங்கும் காலத்தை அவர் தீர்மானித்ததாகக் கூறப்படுகிறது.
தனது முடிவைப் பற்றி அந்த மருத்துவர் கூறுகையில், "அங்கு எனது பெயர் மட்டுமே பயன்படுத்தப்படும், ஆனால் தவறுகள் அனைத்தும் நிர்வாகத்தால் செய்யப்படும். நோயாளிகளின் பாதுகாப்பை விலையாகக் கொடுத்து எனக்கு இந்த வேலை தேவையில்லை. எந்தவொரு பெரிய ஊதியமும் நோயாளிகளின் உயிருக்கு ஈடாகாது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து இணையவாசிகள் இருவேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பலரும் அந்த மருத்துவரின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். "சிஸ்டம் மாற வேண்டும்" என்றும், அவர் சொந்தமாக மருத்துவமனை தொடங்கி நேர்மையாகச் சேவை செய்ய வேண்டும் என்றும் வாழ்த்துகின்றனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் பெயரை வெளியிட வேண்டும் என்றும், உரிய அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இருப்பினும், ஒரு சிலர் இத்தகைய புகார்கள் அதிகரிப்பது கவலை அளிப்பதாகவும், தனிநபர் விலகுவது மட்டுமே தீர்வாகாது, ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பிலும் மாற்றம் தேவை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் லாப நோக்கம் அதிகரிப்பது குறித்த கவலையை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

