ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சாக்சு பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, விடிய விடிய சடலத்தின் அருகிலேயே கணவன் அமர்ந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் சாங்கனேர் பகுதியைச் சேர்ந்த சுனிதா (25) மற்றும் ராமாவதார் ராய்கர் ஆகிய இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன்-மனைவி இடையே வரதட்சணை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாகக் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராமாவதார் தான் வைத்திருந்த கத்தியால் சுனிதாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். இதில் அந்த அறையின் தரை முழுவதும் ரத்த வெள்ளமாகக் காட்சியளித்தது.
மனைவியைக் கொன்ற பிறகு, குற்ற உணர்ச்சியில் ராமாவதார் அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மனைவியின் சடலத்திற்கு அருகிலேயே இரவு முழுவதும் அப்படியே அமர்ந்திருந்துள்ளார். அதிகாலை 6 மணியளவில் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, அறைக்குள் நடந்திருந்த கோரச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயங்களுடன் சடலத்தின் அருகே அமர்ந்திருந்த ராமாவதாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். சுனிதாவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வேலையில்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படும் நிலையில், சுனிதாவின் சகோதரர் முகேஷ் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். தனது தங்கையை வரதட்சணை கேட்டு ராமாவதார் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாக அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

