கடந்த சில காலமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடுமையான பதற்றம் நிலவி வந்த சூழலில், தற்போது உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதியளிக்கும் வகையில் ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
ஈரானின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் மீதான கடற்படை முற்றுகையை நீக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அதற்குப் பதிலாக சர்வதேச அளவில் மிக முக்கியமான 'ஹோர்முஸ்' கடல்வழியை மீண்டும் திறந்துவிட ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த இரு நாடுகளின் போரினால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தற்காலிக சமாதான ஒப்பந்தம் மூலம் எண்ணெய் விநியோகம் மீண்டும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் பொருளாதார பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த முதற்கட்ட தற்காலிக ஒப்பந்தத்தின்படி, ஈரான் ஒரு மாதத்திற்குள் ஹோர்முஸ் கடல்வழியில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்தை வழக்கம்போல சீரமைக்கும்; அதற்குப் பதிலாக அமெரிக்கா ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு கடற்படை முற்றுகையை முழுமையாக வாபஸ் பெறும்.
இருப்பினும், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களின் நிறுத்தத்தில் எந்த மாற்றமும் செய்யாது என்றும், முறையான சரிபார்ப்புகளுக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் ஈரான் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டாய அங்கீகாரத்தைப் பெற முடியும் என்பதால், இரு நாடுகளுமே இந்த ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கும்.
இடைக்கால பேச்சுவார்த்தையின் போது தன் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வேண்டும் மற்றும் தங்களின் முடக்கப்பட்ட சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

