ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில், உலகின் 'நம்பர் 1' பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொண்டு, 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி விளாசிய சிக்ஸர்கள் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த இளம் வீரரின் துணிச்சலான ஆட்டத்தைப் பாராட்டி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
கவுகாத்தியில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அனுபவம் வாய்ந்த பும்ரா வீசிய முதல் பந்தையே லாவகமாகத் தூக்கி சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் இடதுகை ஆட்டக்காரரான சூர்யவன்ஷி. அந்த ஓவரின் நான்காவது பந்திலும் மற்றொரு அபாரமான சிக்ஸரை அவர் விளாசினார். சிறுவன் ஒருவன் பும்ராவின் வேகத்தைச் சற்றும் தயக்கமின்றி எதிர்கொண்ட விதம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
சூர்யவன்ஷியின் இந்த ஆட்டம் குறித்து தனது யூடியூப் சேனலில் அஸ்வின் பேசியதாவது, உண்மையைச் சொல்லப்போனால், இந்த அதிசய சிறுவன் நம்பமுடியாத வகையில் விளையாடுகிறான். நாளுக்கு நாள் நான் அவனது ஆட்டத்திற்குப் பெரிய ரசிகனாக மாறி வருகிறேன். நேற்று அவனது ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே நானும் எனது மனைவியும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்தோம். அவன் எங்களை ஏமாற்றவில்லை.
உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரான பும்ராவின் முதல் பந்தைச் சந்திக்கும்போது எவருமே சிறிது நேரம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது அவனது அபாரத் திறமையைக் காட்டுகிறது என அஸ்வின் புகழ்ந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல் 2026 தொடரில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 52 ரன்கள் விளாசிய சூர்யவன்ஷி, அடுத்தடுத்த போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக 31 மற்றும் 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். மழையால் 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 150 ரன்கள் குவித்து, பின்னர் மும்பையை 123 ரன்களுக்குள் சுருட்டி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பீகாரைச் சேர்ந்த இந்த 15 வயது இளம் வீரரின் அதிரடி ஆட்டம், சமூக வலைதளங்களில் 'வைபவ் புயல்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் இதற்கிடையில் உலகத்தரம் வாய்ந்த உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் பும்ராவுக்கே ஆட்டம் காட்டிய 15 வயது சிறுவன் என தற்போது இணையதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்க விடுகிறது.

