உத்தரப்பிரதேச மாநிலத்தில், குடும்பத் தகராறில் மனைவியின் மூக்கை கணவர் கடித்துத் துப்பிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பூல்கான் என்பவருக்கும் அவரது மனைவி பானாவிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த பூல்கான் மனைவியின் மூக்கு மற்றும் கன்னத்தை வெறித்தனமாகக் கடித்தார்.
இதில் மூக்கின் சதை பிய்ந்து ரத்தம் கொட்டியதால், பானா வலியால் அலறித் துடித்தார். படுகாயமடைந்த பானாவிற்கு முகத்தில் 10 தையல்கள் போடப்பட்டுள்ளன. காயத்தின் தீவிரம் காரணமாக, அவரது முகத் தோற்றத்தைச் சரிசெய்ய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இது குறித்து பானாவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கணவர் பூல்கானை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோபத்தில் மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய கணவனின் செயல் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

