விழுப்புரம் மாவட்டம் மொன்னையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், தனக்குப் புதிய பைக் வாங்கித் தரவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த தேவகுமரன் என்ற அந்த மாணவர், தனது தந்தை கலைமணியிடம் கல்லூரிக்குச் சென்று வர வசதியாகப் புதிய பைக் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
ஆனால், அதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்ததால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் படுக்கையறை ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தேவகுமரன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த கோட்டக்குப்பம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சாதாரண ஒரு வாகனத்திற்காக இளைய தலைமுறையினர் தங்களது பொன்னான உயிரைத் துச்சமாக நினைத்து இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

