மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், பள்ளி மதிப்பெண் அட்டையில் சிறுமி திருத்தம் செய்ததாகச் சந்தேகப்பட்ட தந்தை, தனது 9 வயது மகளைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே மாவட்டம் தேவல்கான் ராஜே கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தாராம் துர்யோதன் சவான். இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று சிறுமி தனது பள்ளி ஆண்டுத் தேர்வு மதிப்பெண் அட்டையைத் தந்தையிடம் காட்டியுள்ளார். அதில் உள்ள மதிப்பெண்களைப் பார்த்த சாந்தாராம், தனது மகள் அதிக மதிப்பெண் பெறுவதற்காகத் திருத்தம் செய்திருப்பதாகச் சந்தேகப்பட்டுள்ளார். மேலும், தனது மகனின் மதிப்பெண் அட்டையிலும் சிறுமி கைவரிசை காட்டியதாகக் கருதியுள்ளார்.
இது தொடர்பாகத் தந்தைக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் நிலைகுலைந்த சாந்தாராம், வீட்டில் இருந்த கோடாரியால் தனது மகளைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் சிறுமியின் கழுத்து மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு பதற்றமடையாத அந்த நபர், தனது குற்றத்தை மறைக்கத் திட்டமிட்டுள்ளார். சிறுமியின் சடலத்தை வீட்டிற்குள்ளேயே வைத்து வீட்டிற்குத் தீ வைத்துள்ளார். இதில் வீட்டின் பெரும்பகுதி எரிந்து சாம்பலானது. இந்தச் செயலுக்கு ஒரு பெண் உதவியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடூரச் செயலை நேரில் பார்த்த அவரது 10 வயது மகன், தனது சித்தப்பாவிடம் நடந்த உண்மைகளைக் கூறி அழுதுள்ளார். உறவினர்கள் உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், எரிந்த நிலையில் இருந்த சிறுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாந்தாராமை கைது செய்துள்ள போலீஸார், அவருக்கு உதவிய பெண்ணையும் தேடி வருகின்றனர். ஒரு மதிப்பெண் அட்டைக்காகப் பெற்ற மகளையே தந்தை கொன்ற சம்பவம் மகாராஷ்டிராவையே உலுக்கியுள்ளது.

